#Partnership கோடி கோடியாய் கமிஷன் வேட்டை
டாஸ்மாக் ஊழல் பற்றி பகீர் தகவல்!
தமிழகமே மிரளும்
ED ரெய்டு பின்னணி
மதுபான ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூன்று நாள் நடந்த இந்த ரெய்டில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியே வந்தன.
அந்த வகையில், ஒவ்வொரு மதுபெட்டிக்கும் 50 ரூபாய் வீதம் பல கோடி ரூபாய் கமிஷன் ஆட்சியாளர்களுக்கு சென்றதாகவும்;
வரப்போகும் சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் முயற்சியாகவே இந்த சோதனை நடந்ததாகவும் இப்போது தகவல் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியது:
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 2003ல் இருந்து நேரடியாக மதுபான சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்கிறது.
அதை பயன்படுத்தி, இலவச திட்டங்கள் துவக்கப்பட்டன. ஆரம்பத்தில் எந்த நிறுவனத்தின் மது வகைகள் அதிகம் விற்பனையாகிறதோ, அதனிடம் இருந்து அதிக மது வகைகள் கொள்முதல் செய்யப்பட்டன.
பின்னர் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ, அந்த கட்சிக்கு வேண்டிய நிறுவனங்களிடம் இருந்து, அதிக மது வகைகள் வாங்கப்பட்டன.
ஒரு 'குவார்ட்டர்' மது பாட்டிலுக்கு 20 முதல் 25 ரூபாய் செலவாகிறது.
அதன் மேல் விதிக்கப்படும் வரி உள்ளிட்ட செலவுகளால் 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீர் உள்ளிட்ட அனைத்து மது தயாரிப்பு செலவுக்கும் இது பொருந்தும்.
ஒரு மது பெட்டியில் 48 குவார்ட்டர் பாட்டிலும், பீர் பெட்டியில் 12 பீர் பாட்டிலும் இருக்கும்.
டாஸ்மாக் கொள்முதல் செய்யும், ஒவ்வொரு மதுபான பெட்டிக்கும் தலா 40 முதல் 50 ரூபாய் ஆட்சியாளர்களுக்கு கமிஷனாக வழங்கப்படுகிறது.
ஒரு பெட்டிக்கு 50 ரூபாய் கமிஷன் என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். கமிஷனை கணக்கு போட்டு பார்த்தால் ஆடிப்போய்விடுவீர்கள்.
அதாவது, டாஸ்மாக் மூலம் தினமும் சராசரியாக 1.50 லட்சம் பெட்டி மது வகைகள்; 60,000 பெட்டி பீர் வகைகள் விற்கப்படுகின்றன.
இரண்டும் சேர்த்து ஒரு மாதத்துக்கு 80 லட்சம் பெட்டி மது, பீர் விற்பனையாகிறது.
ஒரு பெட்டிக்கு 50 ரூபாய் கமிஷன் என்றால், மாதம் 40 கோடி ரூபாய் கிடைக்கிறது.
இதுவே வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் மது விற்பனை ஜெட் வேகத்தில் எகிறி விடும். அந்த கணக்கை சேர்த்தால் கமிஷன் இன்னும் எகிறும்.
பெட்டி கமிஷனில் கிடைப்பது மட்டுமே இவ்வளவு. இது இல்லாமல் பல வகையில் டாஸ்மாக் ஊழல் நடக்கிறது.
கடந்த 2017ல் இருந்து கட்சி ஆதரவு நிறுவனத்திடம் அதிக கொள்முதல் என்ற நிலை மாறியது.
ஒரு பெட்டிக்கு நிர்ணயம் செய்த பணத்தை, எந்த நிறுவனம் கமிஷனாக வழங்குகிறதோ, அதனிடம் இருந்தே அதிக மது வகைகள் வாங்கப்பட்டன. இன்று வரை இதே நிலை தொடர்கிறது.
வேறு எந்த துறையில் இருந்தும், உடனுக்குடன் இவ்வளவு தொகை கமிஷனாக கிடைப்பதில்லை.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய, மது பெட்டியால் கிடைக்கும் கமிஷனை கட்சியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதுதொடர்பாக அமலாக்க துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையிலேயே சோதனை நடந்துள்ளது.
இப்போது சோதனை நடந்த நிறுவனங்களிடம் இருந்து தான், கடந்த 8 ஆண்டுகளில், டாஸ்மாக் அதிக மது வகைகள் கொள்முதல் செய்திருப்பதும், ஒரு பெட்டிக்கு, 50 ரூபாயை கமிஷனாக, அந்த நிறுவனங்கள் வழங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தல் சமயத்தில், வாக்காளர்களுக்கு கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் முயற்சியாகவும், இந்த சோதனை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.#TASMAC #EDRaid #SenthilBalaji #TASMACscam